Samstag, September 30, 2006

மகப்பேறும் மகளிர் மருத்துவமும்- நூல்

நூல் வெளியீட்டு விழா!
- நக்கீரன் -
August-2003

ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குப் போவதென்றால் என் மனம் திக்குத் திக்கு என்று அடிக்கும்.

கூட்டம் வருமா? நூல் விற்பனையாகுமா? நூலாசிரியர் போட்ட முதலைத் திருப்பி எடுப்பாரா? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதில் கூத்தாடும்.

சென்ற சனிக்கிழமை 'மகப்பேறும் மகளிர் மருத்துவமும்" என்ற நூல் வெளியீட்டு விழாவிற்குப் போனபோது என் மனதுக்குள்ளே இதே உணர்வலைகள்தான்.

ஒவ்வொரு கதாசிரியனும், கவிஞனும், கட்டுரையாளனும் தனது படைப்புக்கள் நூல் வடிவில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது ஒரு நியாயமான ஆசை.

சிக்கல் என்னவென்றால் எழுதினவனே அந்த நூலைத் தனது பொருட் செலவில் புத்தகமாக்க வேண்டும்! தனது செலவில் வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும்!

வெளியீட்டு விழாவில் புத்தகங்கள் விற்பனையானால் சரி. இல்லாவிட்டால் முதலுக்கே மோசம் வந்துவிடும்.

பொதுவாக தமிழ்மக்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மிகக் குறைவு. அதைவிடக் குறைவு காசு கொடுத்து புத்தகங்களை வாங்கிப் படிப்பது.

நகைக்கடை, சேலைக்கடை இவற்றுக்குப் போனால் கூட்டம் ஓகோ என்றிருக்கும். கடை திறக்கு முன்னரே வாங்குவோர் கியூ வரிசையில் கால் கடுக்க நிற்பார்கள்.

புத்தகக் கடைக்குப் போனால் அது வெறிச் சோடிப் போய்க் கிடக்கும். ஆக மிஞ்சினால் இரண்டொரு தலைக் கறுப்பைக் காணலாம்!

ஆனபடியால்தான் ரொறன்ரோவில் நூற்றுக் கணக்கான புடவைக் கடைகள், நகைக் கடைகள் கொடிகட்டிப் பறப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது! மறுபுறமாக இரண்டு அல்லது மூன்று புத்தகக் கடைகள் பாயாசத்துக்கு முந்திரி போட்டமாதிரி இருக்கின்றன.

நான் அங்காடி உரிமையாளர்களை குறை சொல்வதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. ஒரு முதலாளித்துவ பொருளியல் அமைப்பில் மக்கள் எதை எதை விரும்புகிறார்களோ அவையே சந்தைக்கு வருகின்றன. அவற்றையே கடைக்காரர்கள் விற்பனைக்கு வைப்பார்கள்!

ஒரு திருமண வீடா? கோயில் தேர் அல்லது தீர்த்தத் திருவிழாவா? பெண்கள் பல நூறு டொலர்கள் செலவழித்து வாங்கிய நகைகளை கழுத்து கை நிறைய போட்டுக் கொண்டு காஞ்சிப் பட்டுடுத்து முகம் முழுதும் பவுடரை அப்பிக் கொண்டு கொண்டைக்கு பூக்களை வைத்துக்கொண்டு ஒரு நடமாடும் சேலை-நகைக் கடைமாதிரி அலங்காரமாகப் போகிறார்கள்.

இந்த அலங்கரிப்பில் ஆண்கள் மட்டும் பாவங்கள். ஒரு கால் சட்டை, ஒரு கோட், ஒரு சேட் அல்லது பட்டு வேட்டி சால்வை. மேற்கொண்டு மிஞ்சினால் கழுத்துக்கு தங்கச் சங்கிலி. அவ்வளவுதான்.

தமிழர்களுடைய வீடுகளில் கண்டிப்பாக சாமி அறை இருக்கும். சாமி அறை இல்லாத வீட்டையே பார்க்க முடியாது! ஆனால் யார் வீட்டிலும் புத்தக அறை இருக்காது! புத்தகம் வாங்கினால் அல்லவா புத்தக அறை வேண்டும்?

ஆங்கிலேயர்கள் அப்படி இல்லை. நிறைய வாசிக்கிறார்கள். நிறைய நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள். உணவுக்கு உடைக்குச் செலவழிப்பதுபோல உழைப்பில் ஒரு பகுதியை புத்தகம் வாங்குவதில் செலவிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு நல்ல நூல் எழுதினால் போதும். அடுத்த நாளே அதை எழுதிய நூலாசிரியர் கோடீசுவராக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

முன்னாள் அமெரிக்க சனாதிபதி கிளின்டனின் மனைவி கிலாறி கிளின்டன் 'வாழும் வரலாறு" ("Living History") என்ற பெயரில் 562 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

நூலுக்கு பிள்ளையார் சுழி போடுமுன்னரே முற்பணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர் வாங்கி விட்டார். நூல் வெளிவந்தபின் 3 மில்லியன். ஆக மொத்தம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்து விட்டார்.

இவரை தூக்கி அப்படியே சாப்பிட்டு விட்டார் இன்னொரு பெண் எழுத்தாளர். பெயர் Ms. J.K. Rowling. இவர் Harry Potter என்ற தலைப்பில் புத்தகங்களை எழுதி வருகிறார். இது சிறுவர்களுக்கான மாயாஜால மந்திர தந்திரப் புத்தகம். முதல் நான்கு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்தப் புத்தகங்கள் நான்கும் 200 நாடுகளில் 200 மில்லியன் படிகள் (20 கோடி) விற்பனை ஆகின. அதன் பதிப்பாளர் Bloomsburyக்கு கிடைத்த இலாபம் 15 மில்லியன் ஸ்டேலிங் பவுண்கள்.

ஐந்தாவது "Harry Potter and the Order of the Phoenix'' என்ற புத்தகம். சரியாக சனிக்கிழமை இரவு 12.01 மணிக்கு உலகம் பூராவும் உள்ள புத்தகக் கடைகள் கதவுகளைத் திறந்து விற்பனைக்கு விட்டன. எக்கச்சக்கமான விளம்பரம்.

முதல் நாள் அமெரிக்க அமேசன் வலையத்தில் மட்டும் 760,000 படிகள் விற்பனையாகின. விலை 29.99 அ.டொலர்கள். மற்ற நாடுகளில் உள்ள கிளைகள் மூலம் 10 இலட்சம் படிகள் விற்பனையாகின.

இன்று இந்த நூலாசிரியர் உலகத்தில் உள்ள முதல் நூறு பணக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். அவரது சொத்தின் பெறுமதி பிரித்தானிய மகாராணி எலிசபெத்தைவிட அதிகமாம்!

தமிழில் ஒரு புத்தகம் வெளியிட்டால் ஆயிரம் படிகள் விற்பனையாவது அதிகம். இதற்கு இந்திய சனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ''அக்னிச் சிறகுகள்" (தன்வரலாறு) விதிவிலக்கு. ஒரு இலட்சம் படிகள் விற்பனையாகி தமிழ்ப் புத்தக வெளியீட்டில் 'சாதனை" படைத்துள்ளது. கலைஞர் மு.கருணாநிதி எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா" 10,000 படிகள் விற்பனையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இருவரும் 'பிரபலங்கள்" என்பதுதான். ஒருவர் இன்னாள் சனாதிபதி. மற்றவர் முன்னாள் முதல்வர்.

நூல் வெளியீட்டு விழா மாலை 6.00 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். ஆறு மணிக்கு 5 மணித்துளிகள் (Minutes) இருக்க 'டாண்' என்று ஸ்காபரோ குடிமக்கள் (Civic) மைய சபைக்குள் நுளைந்தேன்.

நான் எதிர்பார்த்தது சரிதான். விழாத் தலைவர், நூலாசிரியர், நூல் ஆய்வாளர்கள் இப்படிக் கொஞ்சப் பேர் மூலைக்கு மூலை நின்று கொண்டிருந்தார்கள். முன்வரிசை இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தது! ஆறேகால் மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்தார்கள். ஆறேகால் மணிக்குப் பிறகும் பத்துப் பன்னிரண்டு பேர்கள்தான் உட்கார்ந்திருந்தார்கள்!

இது விழா ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய சங்கடத்தைக் கொடுத்ததுபோலும். மெல்ல ஒலிவாங்கிக்கு வந்த தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி பொறுப்பாளர் இராசரத்தினம் அவையோரைப் பார்த்து ''வெளியில் சிற்றுண்டி தேநீர் கோப்பி இருக்கிறது. அங்கு போய் சாப்பிட்டு விட்டு வாருங்கள். ஆனால் அவற்றை அவைக்குள்ளே தயவு செய்து கொண்டு வந்து விடாதீர்கள்"" என்று கேட்டுக் கொண்டார்.

நேரம் இப்போது மாலை 6.30. அப்போதும் கூட்டத்தைக் காணோம். மேலும் காத்திராமல் ஆறே முக்கால் மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.

திரு.சு. இராசரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவருவது மிக அருமை. வெளிநாட்டில் 31 ஆண்டுகள் செலவழித்த ஒருவர் மருத்துவ சம்பந்தமான நூலை தமிழில் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது போற்றத்தக்கது என்றார்.

நேரம் 7.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சொல்லி வைத்தால்போல் மக்கள் இப்போது அவைக்குள் ஒருவர் பின் ஒருவராக வரத்தொடங்கினார்கள்.

விழா 6.00 மணிக்கு என்று போட்டால் ஆறு மணிக்கு விழா தொடங்குவதில்லை. இந்த சூட்சுமம் எங்கடை ஆட்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் ஒரு மணித்தியாலம் கழித்து வருகிறார்கள்!

வரவேற்புரையை அடுத்து வைத்திய கலாநிதி இராஜேஸ்வரி நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். இவர் மகப்பேற்றியல் மகளிர் மருத்துவ சிறப்பு சிகிச்சை மருத்துவர்.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி செ.ஆனைமுகன் எழுதியுள்ள ''மகப்பேறும் மகளிர் மருத்துவம்"" என்ற நூல் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களுக்கு மகப்பேறு தொடர்பான பல அரிய தகவல்களை தருகிறது. அதனைப் படித்து தாய்மார்கள் பயன் அடையலாம் என்றார். பேச்சை எழுதி வாசித்தாலும் அதனை தங்குதடையின்றி செய்து குறித்த நேரத்துக்குள் முடித்துக் கொண்டார்.

அடுத்து வைத்திய கலாநிதி விக்டர் பிஃகுராடோ, குடும்ப வைத்தியர் ஆய்வுரை நிகழ்தினார். தமிழில் மிகச் சரளமாகப் பேசக் கூடிய வைத்திய கலாநிதிகளில் இவரும் ஒருவர். ஆய்வுரை என்றால் மேற்போக்காக நூலைப் படித்துவிட்டு ஒப்புக்குப் பேசிவிட்டு அமருபவர் அல்ல. மாறாக கொடுத்த பணியை பொறுப்புணர்வோடு செய்து முடிக்கக் கூடியவர்.

இந்த வைத்திய கலாநிதியைப் பொறுத்தளவில் அவரது பெயரில்தான் சிக்கல். இலேசில் மனதில் நிற்காது. மற்றவர்களுக்கு எப்படியோ எனது அனுபவம் அதுதான்.

அவரது பெயரைக் கேட்டுவிட்டு இவர் யாரோ வெள்ளைநிறத்தவர் என்று அவரை ஒதுக்கியவர் இருக்கிறார்கள். இதனால் அவரது மருத்துவத் தொழில் தொடக்க காலத்தில் பாதிப்புக்கு ஆளானது என அறிந்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் அவரைக் கண்டு ''உங்கள் பேர் பலரது பல்லை உடைப்பதாக உள்ளது. நிச்சயமாக என் பல்லை உடைக்கிறது. இப்போதுள்ள பெயரை விட்டுவிட்டு நல்ல தூய தமிழ்ப் பெயர் வையுங்களேன்"" என்று கேட்டேன். பக்கத்தில் நின்ற இன்னொரு நண்பரும் அதையே சொன்னார்.

''ஆமாம் மாற்றுகிற யோசனை இருக்கிறது. எனது பெயரை ..........................மாற்றப் போகிறேன்""

''உங்களது புதிய பெயர் இப்போதுள்ளதைவிட மோசமாக இருக்கிறதே?""

''என்ன செய்வது. பெயரை இலேசில் மாற்றிவிட முடியாது!""

சரி. அதனை இத்தோடு விட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு வருவோம்.

''இந்த நூலாசிரியர் ஆனைமுகனுக்கும் பிள்ளையாருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. பிள்ளையார் வேதத்தை எழுதுவதற்கு தனது தந்தத்தில் ஒன்றை முறித்து எழுதினார். இந்த ஆனைமுகன் கொம்புய10ட்டரில்தான் இந்த நு}லை எழுதி முடித்தார். கொம்புயூட்டரை முறித்தாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அது மட்டுமல்ல. அந்தப் பிள்ளையாருக்கும் தலைப்பெயர் எஸ் (சிவபெருமான்). இந்த ஆனைமுகனுக்கும் தலைப்பெயர் எஸ் (செல்லத்துரை)"" என வைத்திய கலாநிதி பிஃகுராடோ நகைச்சுவையோடு பேசி அவையோரை சிரிக்க வைத்தார்.

பலருக்கு மேடையில் பேச வராது. அதிலும் நகைச்சுவையோடு பேச வராது. ஆனால் வைத்திய கலாநிதி பிஃகுராடோவிற்கு இரண்டும் கை வருகிறது. இல்லை கை கொடுக்கிறது.

நூலின் அட்டைப் படத்தின் வடிவமைப்பை வைத்திய கலாநிதி பிஃகுராடோ மிகவும் சிலாகித்துப் பேசினார். உண்மையும் அதுதான். ஒரு பெண்ணின் எலும்புருவம் (ளமநடநவழn) கருப்பப்பை, கருப்பை வாய் பூரணமாக விரிவடைந்த நிலையில் குழந்தையின் தலையின் நிலைப் படம், பிறந்த குழந்தையை கையில் ஆசையோடு வைத்திருக்கும் ஒரு இளந்தாயின் படம். இவை அனைத்தும் நூல் ஒரு மகப்பேறு மருத்துவ நூல் என்பதை பளிச்சென எடுத்துக்காட்டுவதாக இருந்தன!

நூலின் தடித்த மட்டை அந்த நூல் பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் பல முட்டுக்கட்டுக்களை எதிர்நோக்குகிறார்கள். முதலாவது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு போதியளவு இல்லாதது மருத்துவர்களுக்கு தங்கள் வருத்தங்களைச் சொல்லி மருத்துவம் செய்யத் தடையாக இருக்கிறது. இரண்டாவது மருத்துவரிடம் போகும்போது தங்கள் கணவர்மாரோடு சேர்ந்து போவதில்லை. இதற்கு கணவர்மார்களுக்கு இருக்கும் வேலைப்பளு அதனால் ஏற்படும் நேர நெருக்கடி காரணமாகும்.

'தமிழ்நாட்டில் வழங்கும் கலைச் சொற்கள் சிலவற்றுக்குப் பதில் இலங்கையில் வழங்கும் கலைச் சொற்களை நூலாசிரியர் பயன்படுத்தி இருந்திருக்கலாம்."

சொற்களினால் வரும் குழப்பத்துக்கு ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொன்னார்.

'தமிழில் சிறந்த காவியம் படைப்போன் தமிழ்மொழிக்கு உயிர் கொடுக்கிறான்" 'பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"" என்ற பாரதியாரின் ஆசையை நூலாசிரியர் நிறைவேற்றி இருக்கிறார்" என கலாநிதி பிஃகுராடோ நூலாசிரியருக்குப் புகழாரம் சூட்டினார்.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் ஒரு பேராசிரியர் மருத்துவ மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பாரோ அப்படி திரையில் கணனி மூலம் புத்தகத்தின் உள்ளடக்கத்தை விளக்கி நீண்ட நேரம் பேசினார்.

முதல் பகுதி (28 அத்தியாயங்கள்) மகப்பேறு பற்றியது. இரண்டாவது பகுதி (32 அத்தியாயங்கள்) மகளிர் மருத்துவம் பற்றியது. இதைவிட 108 வரைபடங்கள் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கங்களின் எண்ணிக்கை 672.

'இந்த நூலின் விற்பனையால் வரும் வருவாய் தமிழர் வாழ்க்கை, கலாசாரம், தமிழ்மொழி முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்" என நூலாசிரியர் பலத்த கை தட்டலுக்கு மத்தியில் அறிவித்தார்.

புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இவ்வளவு பேர் திரளாக வந்திருப்பது தனக்கு வியப்பாக இருக்கிறதாக சொன்னார். தமிழ் நாட்டில் புத்தக வெளியீட்டுக்கு 50-60 பேர் இருக்கக்கூடிய மண்டபமே தெரிவு செய்யப்படுகிறது என்றார். விழாவில் பேசுகிறவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். ஆனால் இங்கு உரையாற்றிய அத்தனை வைத்தியக் கலாநிதிகளும் அழகான தமிழில் பேசினார்கள். 'அறிவியல்பற்றிய நூல்களுக்கு தமிழில் பஞ்சம் இருக்கிறது. மருத்தவம்பற்றி தமி;ழில் எழுதப்பட்ட மூன்றாவது நூல் இது" என்றார்.

நூல் ஆய்வுக்கு வைத்திய கலாநிதிகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் அந்தத் துறைக்கு வெளியேயுள்ள ஒருவரை வேறு கண்ணோட்டதில் ஆய்வு செய்ய விட்டிருக்கலாம்.

உரையாற்றிய வைத்திய கலாநிதிகள் புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களுக்குத் தாங்களே வாசகர்கள் வைத்தியம் செய்ய எத்தனிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். இது ஒரு வருமுன் காக்கும் தற்பாதுகாப்பு நடவடிக்கை என்று நினைக்கிறேன்!

ஒரு மொழி வளர வேண்டும் என்றால் அந்த மொழி நாளும் பொழுதும் எங்கும் எதிலும் எல்லோராலும் எல்லாத் தளங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இன்று தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில், பணிமனைகளில், பல்கலைக் கழகங்களில் (தஞ்சைப் பல்கலைக் கழகம் விதி விலக்கு) ஆங்கிலமே அரசோச்சுகிறது. வழிபாட்டுத் தலங்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தத் தடைக் கற்கள் இருக்கும்போது தமிழ்மொழி எவ்வாறு வளர முடியும்?.

தமிழ்மொழி கொஞ்சமாவது வாழ்கிறது என்றால் அது தமிழீழத்தில் மட்டுந்தான்.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 100 ஆண்டுகளில் 40 மொழிகள் அழிந்துவிடும் என்றும் அதில் தமிழ்மொழியும் ஒன்று என்று தெரிவிக்கிறது.

எதிர்காலத்தில் தமிழ்மொழி மெல்லச் சாகுமா இல்லை தப்பிப் பிழைக்குமா என்பது உலகெங்கும் பரந்து வாழும் ஏழு கோடி தமிழ்மக்கள் கைகளிலேயே இருக்கிறது.

தன் பங்குக்கு நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் அறிவியல் தமிழுக்கு ஒரு கொடியேற்றம் செய்து வைத்திருக்கிறார்! பாராட்டுக்கள்!

இந்நூலினை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள்:
S.Ahnaimugan
P.O.Box 5291
Palmerston North
New Zealand
E-mail:ahnaimugan@inspire.net.nz

- நக்கீரன் -
August-2003

Donnerstag, September 14, 2006

உயிர்ப்பு - சிறுகதைத்தொகுப்பு


7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், திரு முருகபூபதி அவர்களால் தொகுக்கப் பட்ட "உயிர்ப்பு" நூல் வெளியிட்டு வைக்கப் பட்டது.

உயிர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கெண்டிருக்கின்ற 20 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.


அவற்றில் முதற் பத்துச் சிறுகதைகள் மீதான எனது பார்வை

உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதோ!
எந்த நாடு எந்தத் தேசம் எதுவாயினும் பெண் என்பவளுக்கு ஏற்படுகின்ற சில துயர்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. உசா யவாகரின் மலரொன்று கருகுகின்றதே கதையும் இப் பிரச்சனையைத் தொட்டுள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட இக்கதையில் சம்பியா நாட்டைச் சேர்ந்த விக்டோரியா என்ற 20வயது இளம் பெண் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பணிப்பெண்ணாய் பணி புரிகிறாள். அந்தக் குடும்பத்தில் நல்லவளாய் முத்திரை பதித்து நட்போடு பழகும் அவள் தனது பணியை நேர்த்தியாகவும் விசுவாசத்தோடும் செய்யும் ஒருத்தியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.

அவள் தனது 16வது வயதிலேயே நண்பன் என்ற பெயரோடு பழகிய ஒருவனால் தாயாக்கப் பட்டுக் கைவிடப் பட்டவள். தற்போது மீண்டும் ஒருவனோடு நட்பாகி மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்த போது எயிட்சையும் அவனிடமிருந்து பெற்று இறந்து போகிறாள்.

இரு ஆண்களிடமிருந்தும் சுகத்தையும் விட சுமைகளையே அதிகமாகப் பெற்ற விக்ரோறியாவின் இறப்பு கதாசிரியரின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பும், விரக்தியும் கதையின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும் கதையில் இன்னும் பல விடயங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

குறிப்பாக, எந்தப் புலத்தைக் கொண்டு ஒரு சிறுகதை அமைகிறதோ அந்தப் புலத்தோடு வாசகரை அழைத்துச் செல்வதும் அந்தப் புலம் பற்றிய செய்திகளை கதையினூடு வாசகனுக்குத் தருவதும் சிறப்பானது. அந்த வகையில் உசா யவாகர் வெற்றி கண்டுள்ளார். கதையில் கிடைத்த பல சுவையான தகவல்களில் சம்பியாவில் முருங்கைக்காய் மரங்கள் இருப்பதுவும் முருங்கைக்காயை அவர்கள் Devil stick என்பதுவும் நான் அறிந்திராத தகவல்கள்.

கதை இத்தனை நீளமாக இல்லாமல் குறுகலாக இருந்திருந்தால் நறுக்கென்று அமைந்த மிக அருமையானதொரு கதையாக மிளிர்ந்திருக்கும்.

அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடி
கலை வளர்பதும், தமிழ் வளர்ப்பதும் தமை வளர்ப்பதற்க்கு என்ற நிலை புலத்தில் மட்டுமல்ல தாய் நிலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் புலத்தில் கலை என்றால் என்னவென்றே தெரியாத…, தமிழ் மேல் துளி கூட அக்கறையில்லாத…, சிலர் கலை வளர்ப்பதாகவும், தமிழ் வளர்ப்பதாகவும் சொல்லிக் கொண்டு தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன. இப்படியானவர்களின் பாசாங்கும் போலியும் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களுக்குப் புரியாமலும் இல்லை. அ.சந்திரகாசனின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியும் இப்படியான போலிகளைத்தான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

"தமிழ், தமிழ்" என்று மேடைகளில் முழங்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் தமிழே தெரியாமல் இருப்பதை நாம் நடப்பிலே பார்த்திருக்கிறோம். இக் கதையிலே தமிழுக்குச் சேவை செய்வதற்காகவே சிட்னி தமிழ்ப் பாடசாலையின் தலைவராகத் தெரிவு செய்யப் படுகிறார் கணேசானந்தம். தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்பிப்பது மட்டும் போதாது. வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து வந்த பின் அவர் மகன் வெளியிலே ஆட்களின் முன் தன்னோடு தமிழில் பேசி மானத்தை வாங்கி விடக் கூடாது என்ற மனைவியின் வேண்டுகோளை ஆமோதிக்கிறார். இது உடனடியாகச் சிரிப்பை ஏற்படுத்தினாலும் சிந்திக்கும் போது எமது சமூகத்தின் ஆரோக்கியக் கேட்டை உணர்த்துகிறது.

ரதியின் நெருடல்
அம்மா தெய்வத்துக்குச் சமனானவள்தான். அம்மாவுக்காக மகன் எதையும் விட்டுக் கொடுப்பதுவும், மகனுக்காக அம்மா விட்டுக் கொடுப்பதும் எத்தனை சங்கடமானாலும் இயல்பிலே நடக்கக் கூடிய விடயங்கள். ஆனால் இங்கே இவர்களிடையே மனைவி என்றொருத்தி வரும் போது புரிந்துணர்வுகள் சரியாக அமையாத போது தவிர்க்க முடியாத பல சங்கடங்கள் ஏற்படலாம்.

ரதியின் நெருடல் இந்தியாவைப் பின் புலமாகக் கொண்டு எழுதப் பட்ட கதையாயினும் ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக் கூடிய அம்மா, மகன், மனைவிக்கு இடையிலான யதார்த்தமான இந்தப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது.

இந்தக் கதையில் அம்மாவின் சில புரிந்துணர்வற்ற தன்மைகளும் அதனாலான சிக்கல்களும் அம்மாவை முதியோர் விடுதியில் சேர்க்குமளவுக்கு வருகிறது. இது குற்ற உணர்வுடனான சலனத்தை ஏற்படுத்தினாலும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பில் வீட்டிலே குறையும், கூப்பாடுமாய் இருப்பதை விட அவரவர்க்கு ஏற்ற வழியில் தனியாக வாழ்வது சந்தோசத்தையும் நிம்மதியையும் தரலாம் எனபதை உணர்த்துகிறது.

கதையில் கதாசிரியர் அம்மாவைச் சந்தோசமாக வைத்திருப்பது மட்டுமல்ல… மனைவி குழந்தைகளையும் சந்தோசமாக வைத்திருப்பது ஒரு ஆணின் கடமை என்ற நல்ல விடயத்தையும் சுட்டியுள்ளார்.

கதையில் வரும் சம்பாசணைகளை பேச்சுத் தமிழிலேயே தந்திருந்தால் கதையிலும் யதார்த்தம் மிளிர்ந்திருக்கும். கதாசிரியரின் வாழ்நில வட்டாரச் சொற்களும் வாசகருக்குக் கிடைத்திருக்கும்.

சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம்
அம்மா…! எமது இளமைப்பருவத்தில் அவள் இல்லாத பொழுதுகளை எம்மால் எண்ணிப் பார்க்கவே முடியாது. எமக்கு எல்லாமே அவளாகத்தான் இருப்பாள். இந்த நிலையில் அவளின் இறப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

சாந்தா ஜெயராயின் அம்மா இல்லாத ஒரு மணி நேரம் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கதை.

செல்லமாகவும், வசதியாகவும் புலத்தில் வளர்ந்த ஒரு பதினைந்து வயதுப் பெண் திடீரென அம்மாவை இழந்து விட்டால் அவளின் உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதை சாந்தா ஜெயராய் சொன்ன விதம் மிக அழகாக அமைந்துள்ளது.

ஆனால் அம்மா இறந்து விட்டதாகக் கனவு கண்ட ஒரு பெண்ணின் கனவில் இத்தனை விடயங்களும் வந்து விடுமா என்பது கேள்விக் குறியாகிறது. அம்மா திடீரென இறந்து விட்டால்… நினைத்துப் பார்க்கவே முடியாத விடயம். அதைக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போது இத்தனை உணர்வுகளும் ஒருங்கே வந்து விடுமா?

ரவியின் கரைந்துரையும் நாகங்கள்
புலம் பெயர்ந்தாலும் நாம், எமது ஊர், எம்மவர் என்ற ஒரு பற்றுதலோடும் உண்மையாகவே உதவும் நோக்கோடும் வாழ்பவர்கள் மிகச்சிலரே. இக் கதையில் வரும் பி.எம் மும் அப்படியான ஒரு நன்நோக்குடையவர். உணவு விடுதி ஒன்றை நடாத்தி தானும் வாழ்ந்து ஊருக்கும் உதவிக் கொண்டிருக்கும் அவரின் இனப்பற்றும் ஊர்ப்பற்றும் இயல்பாகவே அவரை மற்றவர்களுக்கும் உதவ வைத்தது.

அவரது அந்த நன்நோக்கை தனக்குச் சாதகமாக்கி அவரது உதவியைப் பெற்று அவரது உணவு விடுதியிலே வேலை செய்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட ஒருவர் அவருக்கு எதிராகச் செயற்பட முனைந்தது ஊரிலே இரும்புக் கடையில் வேலை செய்த ஒருவர் சில வருடங்களில் தானே இரும்புக்கடை ஒன்றைத் திறந்த ஏமாற்று வித்தையை ஞாபகப் படுத்தியது.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள்
பணம் தேடுவது ஒரு அவசியமான செயற்பாடாயினும் புலத்தில் சக்திக்கு மீறி வீடு கார் தளபாடம் என்று வாங்கி விட்டு அதற்காக தமது வாழ்வைத் தொலைப்பவர்கள் பலர். இவர்களில் பலர் தமது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் தேவைப்படும் அன்பு அணைப்பு ஆதரவைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. பணத்தாலும் பொருளாலும் பிள்ளைகள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு பிள்ளைகளையே தொலைத்து விடுவார்கள்.

புவனா இராசரட்ணத்தின் அர்த்தங்கள் கதையிலும் பெற்றோர் வேலை வேலை என்று திரிய வீட்டில் எந்தப் பிடிப்பும் இல்லாத சூழ்நிலை உருவாக மகன் முரளி போதை மருந்துக்கு அடிமையாகிறான். நீட்டி முழக்காமல் நறுக்கெனச் சொல்லப் பட்ட சிந்திக்க வைக்கும் கதை.

கல்லோடைக்காரனின் மறக்குமா மண்வாசைன…?
சிலர் புலம் பெயர்ந்து எத்தனை வருடங்கள்தான் ஆனாலும் அங்குள்ள நல்லவைகளைக் கண்டும் அனுபவித்தும் அந்தச் சூழலை தமக்குச் சாதகமாக்கி மகிழ்ச்சி கொள்வதை விடுத்து எப்போதுமே ஊரில் உள்ளவைகளையும், ஊரில் வாழும்போதான காலங்களையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதையில் அவுஸ்திரேலிய மண்ணில் வாழும் ஒருவர் ஒவ்வொரு விடயத்தையும் ஊர் நடப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு மனம் பொருமுகிறார். ஊர் நினைவுகள் மறக்க முடியாதவைதான். அதற்காக அதையே நினைத்து ஏங்கி ஏங்கி இப்படி வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்த்தும் விதமான கதை. சொல்ல வந்த விடயம் நல்ல விடயம். சற்றுக் குறுக்கிச் சொல்லியிருந்தால் சொன்ன விதமும் மிக நன்றாக அமைந்திருக்கும்.

நித்தியகீர்த்தியின் அது ஒரு பருவகால விளையாட்டு
இணையமும், மின்னஞ்சலும் காதல் பரிமாற்றங்களுக்கான ஊடகங்களாக மாறிவிட்ட இன்றைய காலத்திலும், வேலியினூடு காதல் கடிதங்களைப் பரிமாறிய அன்றைய காலத்திலும் காதல் ஒன்றேயானாலும் அதனது வெளிப்பாடுகள் வேறு விதமான சந்தோசங்களைத் தருவனவாக இருந்தன.

நித்தியகீர்த்தி அவர்களின் அது ஒரு பருவகால விளையாட்டு சொல்ல வந்த விடயம் வேறு கோணத்தில் கனமாக இருந்தாலும் கதையை வாசிக்கும் போது அன்றைய காதலும் வேலிச்சண்டையும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்.. என்று மெல்லிய கிளுகிளுப்புடன் எம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.

கவித்துவம் கலந்து நளினமாக எழுதப் பட்ட இக் கதையின் சாராம்சம், சமூகம், அந்தஸ்து... என்ற போலி கௌரவங்களுக்குப் பலிக்கடாவாகிப் போன வாணி என்ற ஒரு பெண்ணின் வாழ்வைக் கொண்டுள்ளது. பருவத்தே அரும்பிய ஒரு காதல் காரணமாக அவள் 17 வயதிலேயே தன்னை விடப் 12 வயது அதிகமான நந்தகுமாருக்கு மனைவியாக்கப் பட்டு விட்டாள். அம்மாவின் போலி கௌரவந்தான் அதற்கு முக்கிய காரணம்.

வாணியால் அந்த வயதில் அம்மாவை மீற முடியவில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்தையோ எங்காவது ஓடி விடும் எண்ணத்தையோ அவளால் செயற் படுத்தவும் முடியவில்லை. அதற்குள் அவள் தாயாகியும் விட்டாள். ஆனாலும் திருமண பந்தத்தில் அவள் மனம் ஒட்டவும் இல்லை. ஒரு வேளை நந்தகுமார் வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராக அவளோடு வேறு மாதிரிப் பழகியிருந்தால் அவளும் பழசுகளை மறந்து குடும்பத்துக்குள் முழுமனசோடு இணைந்திருக்கலாம். அது நடக்கவில்லை. 23 வருடங்களின் பின் தன் மகனுக்கும் ஒரு வாழ்வு அமைந்த பின் அவள் நந்தகுமாரை விட்டுப் போகத் துணிகிறாள். ஒரு புரட்சியான கதைதான்.

ஆனால் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் மனைவியை விட்டுப் போவது என்பதும், மனைவி கணவனை விட்டுப் போவது என்பதும் அத்தனை சுலபமான விடயமல்ல. அது சிலரால் மட்டுமே முடிந்த விடயம். இங்கு வாணியின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவளிடம் 23 வருடங்களாக அந்தத் துணிவு இல்லை. 23 வருடங்களாக வராத அந்தத் துணிவு 23 வருடங்களின் பின் அவளிடம் வருமா என்ற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.

இப்படியான ஒரு புரட்சியான முடிவைச் சொன்ன கதாசிரியரின் மனதில், பெண்கள் அழகாக உடுத்துவதும், நகைகள் அணிவதும் தமது அழகைப் புருசனுக்குக் காட்டுவதற்கோ அன்றி வேறு ஆண்களுக்குக் காட்டுவதற்கோ என்ற தப்பான அபிப்பிராயம் பதிந்துள்ளதைக் கதையினூடு காண முடிகிறது.

எஸ். கிருஸ்ணமூர்த்தியின் பசி
பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்பது பலரின் நினைப்பு. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலதை எம்மால் வாங்கி விட முடியாதென்ற உண்மையை எஸ்.கிருஸ்ணமூர்த்தியின் பசி உணர்த்துகிறது.

அவுஸ்திரேலியாவில் வசதியான சூழ்நிலையில் வாழும் தர்சனிடம் பணம் போதுமான அளவு இருந்தும் பக்கத்தில் கடைகள் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் மகளின் பசியை போக்க முடியவில்லை. மகள் பசியால் துடித்த போதுதான் ஈழத்தில் உணவின்றி அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது.

சுருக்கமாக நல்ல விடயமொன்றை மற்றவர்களுக்கு உணர்த்தி விட்ட கதை.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம்
காதலும் தோல்விகளும் என்றைக்குமே தவிர்க்க முடியாதவை. காதல் தோல்விகள் எமது பெண்களைக் கூனிக் குறுக வைத்ததும், தற்கொலை வரை கொண்டு சென்றதும் போராட்டம் என்ற ஒன்று எமது நாட்டில் தொடங்குவதற்கு முன் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

களுவாஞ்சிக்குடி யோகனின் அன்னம் அன்றைய சீர், சீதனங்களில் காதலைத் தொலைத்தவள். ஏறத்தாள 40-45 வருடஙகளின் முன் காதலிப்பதே பாவமெனக் கருதப் பட்ட சூழலில் வாழ்ந்த அன்னமும் தற்கொலை வரை செல்லத் தயங்கவில்லை. ஆனாலும் சாகவில்லை.

உறவினரையோ, காதலனாக இருந்து ஏமாற்றிய ஆறுமுகத்தையோ பார்க்க விரும்பாமல் சிங்கப்பூருக்குச் சென்று விட்டாள். அங்கு ஒரு சந்தர்ப்பத்தில் சைமன் என்பவரோடு மனம் ஒத்துப் போக அவரோடு தன் வாழ்வையும் இணைத்து அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டாள். ஆனாலும் மனதின் அடியில் ஆறுமுகத்தின் மீதிருந்த வெறுப்பு மட்டும் அவளை விட்டு அகலவில்லை. தனது 65வது வயதில் ஒரு திருமண வைபவத்தில் எதிர் பாராத விதமாக அவனைக் காண நேர்ந்த போது உடனேயே அங்கிருந்து வெளியேறி நாட்டுக்குத் திரும்புகிறாள்.

கதை சற்று நீளமாக இருந்தாலும் சொல்லப் பட்ட விதம் நன்றாக உள்ளது. ஆனாலும் புதிய சிந்தனைகளோடு வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்ட அன்னம் ஆறுமுகத்தைக் கணடதும் அவ்விடத்தை விட்டு நகர வேண்டுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரவதனா
ஜேர்மனி
7.1.2006

Montag, Juli 17, 2006

இரண்டாம் ஜாமங்களின் கதை(நாவல்)

1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர் சல்மாவின் முதல் நாவல் இது.

இரண்டாம் ஜாமங்களின் கதைக்கான மதிப்புரை
- குவளைக் கண்ணன் -

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் - 629 001.
முதல் பதிப்பு - டிசம்பர் 2004
பக். 520, ரூ. 250/-

1980களின் முற்பகுதியில் ஐந்தாறு தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பேசுகிற புத்தகம் "இரண்டாம் ஜாமங்களின் கதை". ஒரு ரம்ஜான் நோன்புக் காலத்துக்கு முன்னர் தொடங்குகிற நாவல் அடுத்த ரம்ஜான் நோன்பு வருவதற்குள் முடிந்துவிடுகிறது. நாவலின் பெரும்பகுதியும் ராபியா என்னும் சிறுமியின் வாயிலாகவும் அவளைவிட நான்கைந்து வயது மூத்தவளாக இருக்கக்கூடிய அவளது அக்காவான (பெரியப்பா மகள்) வஹிதா என்னும் சிறுமியின் வாயிலாகவும் சொல்லப்படுகிறது. கதையில் காதர், கரீம், சையது, சிக்கந்தர், சுலைமான், பஷீர் என்னும் ஆண்கள் வருகிறார்கள். எந்த ஆணுடைய சித்திரத்துக்கும் ஓரிரு தீற்றலுக்கும் கூடுதலாகக் கவனம் கிடைப்பதில்லை. அவர்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அறியப்படாத வாழ்வுமுறையைக் களமாகக் கொண்டு அறியப்படாத பெண் கதாபாத்திரங்கள் மூலம் பெண்ணின் நிலையை, பெண்ணின் பாடுகளைப் பேசுகிற புத்தகம் இது.

ழுத்து வகைகள் மகிழ்ச்சியைப் பேசுவதைவிட, அநேகமாகத் துன்பத்தையும் வலியையும் பேசும்போதே கூடுதல் கலைத்தன்மை கொண்டவையாக அமைகின்றன. சாதாரணமாக நாம் இந்தத் துன்பத்தையும் வலியையும் மகிழ்ச்சிக்கும் சுகத்துக்குமான எதிர்நிலையாகவே காண்கிறோம். சாதாரணமாக என்னும் சொல்லை இலக்கியத்திற்கு உபயோகிக்க முடியுமா? இலக்கியம் நமது மனத்தின் ஆழ்தளங்களில் இயங்குகிறது, புழுக்கத்திலுள்ள மனத் தளங்களில் இயங்குவதில்லை. நாம் நடைமுறையில் பார்க்கக் கூடிய மாற்றங்கள் ஆழங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மாற்றங்களின் சிறு அறிகுறிகளே. வலி என்னும்போது தலைவலிபோல் உடனடி நிவாரணம் கிடைத்துவிடக் கூடிய வலியல்ல. ஒரு வகையில் ஓரிரு நிமிடங்களில் நிகழக்கூடிய பிள்ளைப் பேறுக்காக ஒன்பது மாதங்கள் சுமக்கிற வலியைச் சொல்லலாம். நீண்டகாலக் கெடுவுள்ள வலி என்பதற்காகவும் புதியதற்குப் பிறப்பளித்தல் இதில் உள்ளதாலும் மட்டுமே இதுவும்கூட ஒரு வசதிக்காக இங்கே சொல்லப்படுகிறது.
வலியை அசௌகரியத்தோடும் நிராசையோடும் தொடர்புபடுத்திப் பழகிவிட்டோ ம். வலியைத் தன்னுடையதேயாகக் கருதிக்கொண்டு சில குறிப்பிட்ட சம்பவங்களாலும் காரணங்களாலும் சில குறிப்பிட்ட நபர்களாலும் ஏற்படுவதாகக் கருதிக் கசந்துபோகிறோம். கசப்பைப் பரவ விடுகிறோம். இது பண்படாத, ஆழமற்ற, மேல் மனத்தில் ஏற்படுவது. இதுவும் ஓர் அறிகுறி மட்டுமே. ஆழ்மனத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் வலி, அந்தக் கட்டத்தின் ஏதோவொரு நடவடிக்கையால் ஏற்படுகிற அசௌகரியத்தால் தனிப்பட்ட வலியாக நம்மால் உணரப்படுகிறது.

ந்தக் கதையில் வரும் ஆண்களில் அப்துல், பஷீர் என்னும் இரண்டு ஆண்கள் சற்றுச் சாதகமான சித்தரிப்பைப் பெறுகின்றனர். இதில் அப்துல் இறந்துபோனவர். பஷீர் ஐந்நூறு பக்க நாவலில் ஒன்றே முக்கால் பக்கங்களுக்கு வருகிறார். கரீம் என்பவர் வேற்று இனப் பெண்ணுடன் தொடர்புவைத்துள்ளார். கணவனைப் பிரிந்து வந்த இரண்டு பெண்கள் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவேறு தலைமுறையைச் சார்ந்தவர்கள். இதில் முந்தைய தலைமுறைப் பெண்ணின் தொடர்பு தெரிவதில்லை, மற்ற பெண் வேற்று இன ஆணோடு தொடர்புகொள்கிறார். இருவருமே துர்மரணம் அடைகிறார்கள். வேறொரு பெண் கணவனோடும் இரண்டு ஆண் குழந்தைகளோடும் உள்ளவள் தனது இனத்து ஆணோடு தொடர்புவைத்திருக்கிறாள். இவள் இறக்கவில்லை. ஓர் ஏழைப்பெண் வேற்று இன ஆணைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவளும் துர்மரணம் அடைகிறாள்.

நாவலின் தொடக்கத்தில் துக்க வீட்டுக்குத் தன்னுடன் அழைத்துப் போகிற தனது மகளிடம் பதற்ற முற்றுத் தாவணி அணிய வைக்கிறாள் அவளது தாய். அந்தச் சிறுமி ஐந்தாவதோ ஆறாவதோ படிப்பவள். மும்தாஜின் கணவன் வெளிநாட்டில் வேலையிலிருப்பவன், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து போகிறவன், இந்தத் துடிப்பான பெண்ணுக்குத் தனது கருப்பை வளர்ச்சி அடையவில்லை என்று தெரிந்ததும் இசிவுநோய் (லீஹ்stமீக்ஷீவீணீ) வந்துவிடுகிறது. அவள் தாய்வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவளது கணவனுக்கு வேறொரு திருமணம் செய்துவைக்கப்படுகிறது. ராபியாவின் வேற்று இனத் தோழி ஒருத்தியின் தாய்க்கு இரண்டு கணவர்கள் இருப்பதாகக் காட்டப்படுகிறது. வஹிதாவின் பெற்றோரான காதரும் றைமாவும் மட்டுமே ஓரளவு மனமுதிர்ச்சி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ரேடியோ சிலோன் கேட்கிற சிறுமியான வஹிதாவுக்கு அவளைப் புரிந்துகொள்ளாத, கவனிக்காத, அவளைவிடப் பதினைந்து வயது மூத்த அவளது அத்தை மகன் சுலைமான் கணவனாகிறான். இவளுக்குச் சிறு ஓசை இருந்தாலும் உறக்கம் வராது. சுலைமான் குறட்டை விடுபவன். இவளது மாமனார் தொட்டுத் தொட்டுப் பேசுகிறவன். அவனைப் பார்த்தால் ஓநாய்போலிருக்கிறது இவளுக்கு. வஹிதா, உறக்கம் வராத இரவு ஒன்றில் முறையற்ற உறவு ஒன்றைப் பார்த்து, அந்தப் பெண்ணைக் கண்டிக்கிறாள். அந்தப் பெண் இவளது தாயைப் பற்றிய இறந்தகால ரகசியம் எதையோ சொல்லி விட்டு அன்றிரவு இறந்து போகிறாள்.

சிறுமி ராபியா தோழியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாள். அஹமது என்கிற பையனுடன் அவளுக்கு ஈர்ப்பு உண்டாகிறது. அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறார்கள். அந்தப் பையன் தன் நினைவாக ஒரு மரப்பாச்சியைத் தந்துவிட்டு வேறு ஊருக்குப் படிக்கப் போய்விடுகிறான். பிரிவோடும் நினைவுப்பரிசோடும் நாவல் முடிகிறது.

"இரண்டாம் ஜாமங்களின் கதை"யில் தமிழ் முஸ்லிம் குடும்பங்களைக் களமாகக் கொண்டு பெண்களின் பாடுகளும் வலிகளும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்த நாவலை, இந்த நாவலை என்றில்லை எந்த நாவலையும், எந்தக் கலைப் படைப்பையும் சமூக ஆவணமாக மட்டுமே பார்க்கக் கூடாது. சொல்லப்போனால் சமூக ஆவணமாகப் பார்க்கவே கூடாது. எழுதியவர் தனது நாட்குறிப்பேட்டைத் தரவில்லை. சமூக ஆவணங்களின் இயங்கு தளமும் இலக்கியத்தின் இயங்கு தளமும் வெவ்வேறு. வாசகர் ஓர் இலக்கியப் பிரதியைச் சமூக ஆவணமாகப் பார்க்கலாம், பார்க்காதிருக்கலாம். அது வாசகரைச் சார்ந்தது. படைப்பைச் சார்ந்ததல்ல. இலக்கியப் பிரதிக்குச் சமூக ஆவணப் பிரதியைக் காட்டிலும் ஆழமான தளங்களில் செயலாற்றும் திராணியுள்ளதாக நான் நம்புகிறேன்.

இந்தக் கதை 1980களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியப் பெண்கள் அனைவருடைய நிலையும் இப்படித்தான் இருந்தது. குறைந்தபட்சம் பூப்பெய்திய பிறகு பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இன்னமும் கூடத் தமிழகத்தின் பல்வேறு இனக் குழுக்களிலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எந்தக் கதையையும் ஒரு குறிப்பிட்ட களத்தில்தான் நிகழ்த்த வேண்டியுள்ளது. அந்தக் களம் எழுதுபவருக்குப் பழகிய களமாக இருக்கும்போது கதையை லாவகமாகச் சொல்ல முடிகிறது. ஒரு குறிப்பிட்ட களத்தில் நிகழ்த்தப்படும் கதை அந்தக் களத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அந்தக் களத்துக்கு மட்டும் தொடர்புடையது என்றால் பிற நாடுகளில் தோன்றிய இலக்கியங்களும் தத்துவங்களும் நமக்கெப்படித் தொடர்புடையனவாக இருக்கும்? இந்தக் கதையைப் படிக்கும்போது 1960களில் கல்வி மறுக்கப்பட்ட ஒரு பெண்ணின் நினைவும் கணவன் வெளிநாட்டிலிருக்க, சில வருடங்களுக்கு முன்புவரை தனது மாமியார் வீட்டில் கிடந்த மற்றொரு பெண்ணின் நினைவும் எனக்கு வந்தது. ஆண்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய, ஓரிரு நாள்களுக்கேனும் உளைச்சல் ஏற்படுத்தக்கூடிய புத்தகம் இது. இந்தப் புத்தகத்தின் 344ஆம் பக்கத்தில் ஷெரீபா என்னும் பெண் அயல் நாட்டிலிருந்த அவளது கணவனுக்கு எழுதியதாக வருகிற கடிதம், மொத்த நாவலின் ஜீவனையும் தன்னிடம் வைத்துள்ளது என்று சொல்லலாம்.

அன்புல்ல மச்சானுக்கு,

அஸ்ஸலமு அலைக்கும். எப்படியிருக்கிறீர்கள். இன்றொடு நிங்கள் எண்ணை விட்டு போய் முப்பத்திரன்டு நாட்களாகிறது. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வருசமாவே எனக்கு இருக்கிறது. திணமும் துங்கும் நேரத்திள் முலித்திருந்து உங்கலை நினைத்துக் கொண்டிருப்பேன் ரொம்பவே கஸ்டமாக இருக்கும் அப்பொ வெல்லாம் என் அம்மாவை நிணைத்துக்கொள்வேன் பாவமாக இருக்கும். எப்படிதான் முப்பது வருசம் இப்படி இருந்திருப்பார்கலோ தெரியவிள்ளை. பிள்லைகளை கவனிப்பதிளேயே காலம் ஓடியிருக்கும் நிணைக்க நேரமிள்லாமல் எனக்கும் பிள்லை பிரந்துவிட்டாள் உங்கலை நினைத்து கொண்டிருக்க நேரமிறுக்காதோ என்னமோ. நேட்று இரவு பீரோவைத் திரந்தபோது நம் கல்யாண போட்டா கண்ணிள் பட்டது அதை பாத்ததும் உங்கல் நாபகம் வந்துவிட்டது. நிக்கா முடிந்த நற்பது நாளிளேயே நிங்கள் உருக்கு போய் விட்டது கண் மரந்தார் போல இருக்கிரது உங்கல் முகம். 24 மாதத்திள் ஒரு மாதத்தை பல்லைக்கடித்து ஒட்டியிருக்கிரேன். மீதி 23 மாதத்தை எப்படி ஓட்டப் போகிரேனோ தெரியவிள்லை நினைக்கையிலேயே மளைப்பாக இருக்கிரது. உங்கள் ஒடம்ப கவனியுங்கல். இங்கெ நல்ல சாப்படு சாப்பிடும் போது உங்கல் நாபகம் வந்து விடும். எங்க வீட்டிளும் உங்க வீட்டிளும் அணைவரும் நலம். உரில் விசேசம் எதுவும் இல்லை முடியும்போது போணில் பேசுங்கல். உங்கல் குரலை கேட்டலாவது ஆருதலாக இருக்கும்.

முத்தங்கலுடன்
ஷெரிபா.

இந்த நாவலில் வரும் ஆண்கள் உள்நாட்டில் வியாபாரிகளாகவோ அல்லது பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களாகவோ இருக்கிறார்கள். பெண்களின் வாழ்வு மற்றவர்களால் முடிவுசெய்யப்படுகிறது. பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிற அந்தரங்க மொழி சில இடங்களில் உபயோகிக்கப்படுகிறது. சில மீறல்கள் பேசப்படுகின்றன. மீறல்கள் எல்லாச் சமுதாயங்களிலும் எல்லா இனக் குழுக்களிலும் இருப்பவையே. சில சமுதாயங்கள் இவற்றைப் பேச அனு மதிப்பதில்லை. அனுமதிக்கப்படாததைப் பேசுகிற துணிவுடையவர்கள் எப்போதும் தோன்றியிருக்கிறார்கள். கண்டனங்களும் அங்கீகாரங்களும் மற்றவர்களைவிட வேகமாக இவர்களை வந்தடைந்திருக்கின்றன. இவை சல்மாவையும் வந்தடையும். இந்தப் புத்தகத்தின் பலமாக, சாதகமான அம்சமாகப் பாசாங்கின்மையையும் இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தோற்றுவாயாக இருந்து மொத்த நாவலிலும் அடி நாதமாக ஒலிக்கிற வலியையும் சொல்ல வேண்டும்.

ஒரு சித்திரத்தின் வெற்றி என்பது ஓவியர் உபயோகிக்காத வண்ணங்களிலும் தீட்டாத தீற்றல்களிலும் உள்ளது என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நாவல் வலியிலிருந்து தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் வலியை எழுத முயற்சித்திருக்கிறார். இதனால் நாவல் நீண்டுபோகிறது. இது சல்மாவின் முதல் நாவல். இந்த நாவலின் சாதகமான அம்சமான பாசாங்கின்மையைத் தக்க வைத்துக்கொண்டு, வலியைப் பற்றி எழுதாமல் வலியிலிருந்து மட்டும் அவர் எழுதும்போது தமிழுக்குச் சிறந்த நாவல் ஒன்றை அவரால் தர முடியும்.

இரண்டாம் ஜாமங்களின் கதை - 1
இரண்டாம் ஜாமங்களின் கதை - 2
இரண்டாம் ஜாமங்களின் கதை - 3
இரண்டாம் ஜாமங்களின் கதை - 4
இரண்டாம் ஜாமங்களின் கதை - 5
இரண்டாம் ஜாமங்களின் கதை - 6